திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பாராவ், இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு கோவையில் இருந்து வேலையை முடித்து கொண்டு ராமச்சந்திரன் திருப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த சரவணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் ராமச்சந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ 5 ஆயிரத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது ராமச்சந்திரனை கொலை செய்ததற்காக சரவணன் மற்றும் கார்த்திக் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் அபராதமும், வழிப்பறி செய்ததற்காக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ 500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதனையடுத்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.