கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கிருஷ்ணகுமாரின் நடவடிக்கை கல்லூரி மாணவிக்கு பிடிக்காததால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாணவி கடந்த 4 மாதங்களாக கிருஷ்ணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது கிருஷ்ணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் மாணவின் வீட்டின் அருகே சென்று அவரை அழைத்தார். வெளியே வந்த மாணவியுடன் தகராறு செய்தார்.
அப்போது கிருஷ்ணகுமார் மாணவியிடம் நீ என்னை காதலித்து ஏமாற்றியதற்கு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும்.இல்லையென்றால் 2 பேரும் சேர்ந்து எடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி அங்கு இருந்து சென்றார்.
இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரின் போலீசார் கல்லூரி மாணவியை மிரட்டிய கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.