கைது 
செய்திகள்

சித்த மருத்துவர் வீட்டில் நகை, பணத்தை திருடிய வாலிபர் கைது

விக்கிரவாண்டி அருகே சித்த மருத்துவர் வீட்டில் நகை, பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சரத்குமார் (வயது 28). இவர் விக்கிரவாண்டி அருகே பொம்பூரில் சித்த மருத்துவராக உள்ளார். இவர் கடந்த 8-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு கிளினிக்கிற்கு சென்றார்.

பின்னர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ¼ பவுன் எடையுள்ள பிரேஸ்லெட், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, 10 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் லட்சுமிபுரம் பகுதியில் நேற்று சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த அஜய் (22) என்பதும், இவர் சரத்குமார் வீட்டில் நகை, பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 15 ஆயிரம், 2 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி ஆகியவற்றை பேர்லீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.