கைது 
செய்திகள்

அவினாசி அருகே வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

அவினாசி அருகே வாலிபரிடம் செல்போன் பறித்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

அவினாசி:

அவினாசியை அடுத்து குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுமான் (வயது 23) இவர் சம்பவத்தன்று அவினாசி பெருமாநல்லூர் சர்வீஸ் ரோட்டில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ரகுமானின் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜனகராஜ் (20) என்பதும், ரகுமானின் செல்போனை பறித்தது இவர்தான் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற ஒரு பெண் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜனகராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.