திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூரில் ஆராயி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வாலிபர் இன்று கைது செய்யப்பட்டார்.
கைதான அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (36) ஆவார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், துணை சூப்பிரண்டுகள் வீமராஜ், அசோக்குமார் ஆகியோர் ரகசிய விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதான வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
தில்லைநாதன் கடந்த சில ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும் அவன் ஆண்கள் இல்லாத வீடுகளை அறிந்து நள்ளிரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வதும் வாடிக்கையாக வைத்திருந்தான்.
மேலும் நகைகளை கொடுக்க மறுக்கும் பெண்களை 2 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் தாக்கி சித்ரவதை செய்தும் வந்துள்ளான். இது தொடர்பாக போலீசார் அவனை பலமுறை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் தில்லைநாதன் ஜாமீனில் வெளியே வந்தான். தொடர்ந்து அதே சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
அவன் முதலில் செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளான். போலீசார் தன்னை கைது செய்ததை தொடர்ந்து செல்போன் பேச்சை தவிர்த்து வந்தான். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தில்லைநாதன் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்துக்கும் சென்றுள்ளான்.
அப்போது அந்த கிராமத்தில் 2 பெண்களை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு ஆராயி வீட்டுக்குள் புகுந்து ஆராயி, அவரது மகள் தனம், மகன் சமயன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.
தில்லைநாதன் இதுவரை 11-க்கும் மேற்பட்ட பெண்களை இரும்பு கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.