தற்கொலை முயற்சி 
செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சி

மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

குழித்துறை:

குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட 31 வயது பெண், தனது குடும்ப பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில், அந்த பெண் கர்ப்பிணியானதாகவும், சப்-இன்ஸ்பெக்டர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தார். இதனை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரம் பகுதி போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற பெண்ணை ஏமாற்றி அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையே மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த பெண், சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அவருக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இளம்பெண் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த இளம்பெண் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அங்கு சென்ற மாதர் சங்கத்தினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.