பாகூர்:
பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் நேற்று மாலை குருவிநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் பாரம் ஏற்றிக்கொண்டு வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்குமூட்டையில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகூர் அன்பரசன் நகர் பங்களா தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது18) என்பதும் இவர் தென்பெண்ணையாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.