வாலிபர் பலி 
செய்திகள்

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

சாத்தான்குளம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து பிணத்தை மீட்டனர்.

மாலை மலர்

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ஞானசவுந்திரம். இவரது மகன் ஜஸ்டின் சாலமோன் (வயது38). இவர் வள்ளியூரில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். வழக்கமாக இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று கிணற்றில் குளிக்க சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். இன்று காலை அப்பகுதி விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. 

இதுகுறித்து அவர்கள் சாத்தான்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு அவரது சாவு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.