செய்திகள்

கோவிந்தசாலையில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

புதுவை கோவிந்தசாலையில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை கோவிந்தசாலை திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அருணாசலம். இவர், புதுவை அண்ணாசாலை குபேர் பஜாரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ரோஜா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரணமின்றி ரோஜா திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து ரோஜாவை அருணாசலத்தின் குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்ததால் ரோஜா உயிர் பிழைத்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று ரோஜா மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் இருந்து குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ரோஜா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT