செய்திகள்

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம்: சென்னை தனியார் நிறுவன மேலாளர் கைது

காட்பாடி அருகே ஓடும்ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் கைதுசெய்யப்பட்டார்.

மாலை மலர்

வேலூர்:

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற சாம்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் பயணம் செய்த அதேபெட்டியில் பெங்களூருவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பெங்களூருவுக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ரெயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

ரெயிலில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ்குமார், அதேபெட்டியில் பயணம்செய்த பெங்களூருவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

உடனே அந்த பெட்டியில் இருந்தவர்கள் ராஜேஷ்குமாரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் காட்பாடி வந்ததும் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews