செய்திகள்

கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து ஒரே வாரத்தில் 70 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருப்பினும் இதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் காரணமல்ல என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கூறி வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட உத்தரபிரதேச அரசு, மருத்துவமனை முதல்வர் மிஸ்ராவை சஸ்பெண்ட் செய்தது. அதேபோல், கோரக்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவரான கபீல் கான் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில்,  70 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் மிஸ்ராஉள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான பணம் செலுத்தாத மருத்துவக் கல்விக்கான கூடுதல் முதன்மை செயலாளர் அனிதா பாட்நகரை நீக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.