செய்திகள்

வீரமரணம் அடையும் போலீசார் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.50 லட்சமாக உயர்வு: உத்தரபிரதேச அரசு

பணியின் போது வீரமரணம் அடையும் போலீசாரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படுவதாக உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

மாலை மலர்

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் போலீஸ் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி லக்னோவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். அப்போது போலீசாருக்கு பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.

அதன்படி போலீசாரின் திறன்மிக்க சேவையை பாராட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை 200-ல் இருந்து 950 ஆக உயர்த்தப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தலா 475 வீதம் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று ஆதித்யநாத் கூறினார்.

மேலும் பணியின் போது வீரமரணம் அடையும் போலீசாரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது வழங்கப்படும் ரூ.25 லட்சத்தை ரூ.50 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இதை அறிவித்த ஆதித்யநாத், வீரமரணம் அடையும் போலீசாரின் குடும்பத்துக்கு தனது அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்றும் தெரிவித்தார். இதைப்போல் போலீசாரின் உணவுப்படியும் அதிகரிக்கப்படும் என ஆதித்யநாத் கூறினார்.