சனா:
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் சனா நகரை 2014-ம் ஆண்டு முதல் தங்கள் கடுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த நகரை மீட்பதற்கு அரசுப்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியான முகமது அலி அல் மக்ஃதிஷ் இன்று காரில் மரிப் மாகாணம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவருக்கு பாதுக்காப்பாக சில பாதுகாவலர்கள் அவரது காரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த சாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கார் அருகே வரும்போது திடீரென வெடித்துச்சிதறியது.
இந்த தாக்குதலில் மந்திரியின் பாதுகாப்பிற்கு சென்ற பாதுகாவலர்கள் 8 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மந்திரி முகமது அலி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.