ஆளுநரை சந்தித்த எடியூரப்பா 
செய்திகள்

கர்நாடகா முதல் மந்திரியாக இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கிறார் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல் அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளோம் என்றார்.

இதையடுத்து, எடியூரப்பா இன்று காலை ஆளுநர்  மாளிகை சென்றார். அவர் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  

அதன்பின்னர் வெளியே வந்த எடியூரப்பா மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளேன். ஆளுநரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்தார். 

எடியூரப்பா மட்டும் இன்று பதவியேற்பார் எனவும், அமைச்சர்கள் பதவியேற்பு மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.