வுகான் நகரில் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமி 
செய்திகள்

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுகான் நகரில் பள்ளிகள் மீண்டும் தொடக்கம்

கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

பிஜீங்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது முதல் சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. குறிப்பாக வுகான் நகரில் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.

அதன் பின் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து ஷாங்காயில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் வுகான் நகரில் பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் மேல்நிலைப்பளிகள் மட்டும் திறக்க கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது. தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதால் வுகான் நகரிலும் தொடக்க நிலை, நடுநிலை உள்பட அனைத்து பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. 

இதையடுத்து பல மாதங்களாக பின்னர் வுகான் நகரில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மொத்தம் 14 லட்சம் மாணவ/மாணவிகள் ஆர்வமுடம் வகுப்புகளில் பங்கேற்றனர். 

வுகான் நகரில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது பிஜீங் மாகாணத்தில் வைரஸ் பரவல் இருப்பதால் அங்கு மட்டும் இந்த மாதம் இறுதியில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.