ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 350க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா மாநிலம் இந்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பிரபலமான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோர் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சியே நடக்கிறது. இந்த சூழலில் தேர்தலை சந்திக்கவுள்ளதால் கட்சியில் இத்தகைய பிரபலங்களைச் சேர்ப்பது தங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் என மாநில பாஜக கருதுகிறது.
இது குறித்து பேசிய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘பபிதா போகத் இந்நாட்டின் இளைஞர்களுக்கு ஓர் உத்வேகம். அவர் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி.
கட்சியில் இணைந்தாலும்கூட அவர் விரும்பினால் மீண்டும் அவர் விளையாட்டைத் தொடர ஒரு விளையாட்டு மந்திரியாக எனது கடமைகளை செய்ய தயாராக இருக்கிறேன்’ என கூறினார்.