செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து அணிக்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், வங்காளதேச அணி நியூசிலாந்து அணிக்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

மாலை மலர்

லண்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேசம் முதலில் பேட்டிங்  செய்தது.

வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் 24 ரன்களுக்கும், சவுமியா சர்க்கார் 10 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும்  நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்காளதேச அணி, 244 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 64 ரன்களும், முகம்மது சைபுதின் 42 ரன்களும் குவித்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில் ஹென்றி 4 விக்கெட்டும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.