உலகம்

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா?.. இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்துள்ளதாக அறிக்கை

மாலை மலர்

ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மற்றும் சில தனிநபர்கள் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்று USCIRF பரிந்துரைத்துள்ளது.

USCIRF என்பது உலக நாடுகளில் மத சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அமைப்பாகும்.

இந்த அமைப்பு தனது ஆண்டறிக்கையில் இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து நலிவடைந்து வருவதாகவும் இந்திய அரசு மதச் சிறுபான்மையினரை குறிவைப்பதாகவும் தனது அறிக்கையில் USCIRF தெரிவித்துள்ளது.

எனவே ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் மற்றும் சில தனிநபர்கள் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்று USCIRF பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவை Country of Particular Concern என்று வகைப்படுத்தவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், USCIRF உண்மைக்குப் புறம்பான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவை தவறாக சித்தரிப்பதாக தெரிவித்தார்.

இந்தியா மீது தேவையற்ற விமர்சனங்களை வைப்பதை விடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து அந்த ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்