உலகம்

டிரம்பின் பெயரால்.. பக்ரீத்திற்கு பலியிடப்படுவதில் இருந்து தப்பிய எருமை மாடு!

சுமார் 750 கிலோ எடையுள்ள எருமை மாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் 'பெஞ்சமின் நேதன்யாகு' என்று பெயரிடப்பட்டது

வங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் எருமை மாடு இணையத்தில் வைரலானது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடுவதற்காக வளர்க்கப்பட்ட இந்த எருமை மாடு சுமார் 700 கிலோ எடையுள்ள இந்த எருமை மாட்டின் நெற்றியில் வெள்ளை நிறத் திட்டும், தலையின் மேல் பகுதியில் அச்சு அசல் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்த மஞ்சள் கலந்த வெள்ளை நிற முடியும் உள்ளது.

இதனால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் இதற்கு 'டொனால்ட் டிரம்ப் எருமை' என்று பெயரிட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகின.

இந்த எருமை மாட்டிற்குப் பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, இதனைப் பலியிடக் கூடாது என்று வங்கதேச அரசு அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்தனர்.

உடனடியாக அதன் உரிமையாளரான ஜியா உத்தீன் மிருதா என்பவரிடமிருந்து அந்த எருமை மாட்டை அரசு விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்காளதேச தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தனர்.

இதே பண்ணையில் உள்ள மற்றொரு எருமை மாடும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. சுமார் 750 கிலோ எடையுள்ள அந்த எருமை மாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் 'பெஞ்சமின் நேதன்யாகு' என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.