உலகம்

Arrest | "கல்லூரி மீது குண்டு போடுங்க..." இஸ்ரேல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்த மாணவி கைது!

மியாமியில் உள்ள பிரதான வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது கல்லூரி மீது "குண்டுகளை வீசுமாறு" கேட்பது போன்ற ஒரு செய்தியை வாட்ஸ்அப் குழு அரட்டையில் பதிவிட்டதற்காக, புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

அது ஒரு நகைச்சுவை என்று அந்த மாணவி அதிகாரிகளிடம் கூறியபோதிலும், பள்ளிகள் தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்த புளோரிடாவின் சட்டங்களின் கீழ் அதிகாரிகள் இந்த அச்சுறுத்தலைத் தீவிரமாகக் கருதுகின்றனர்.

புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக காவல் துறையின்படி, கேப்ரியலா சல்டானா என அடையாளம் காணப்பட்ட 20 வயது மாணவி, மியாமியில் உள்ள பிரதான வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வாட்ஸ்அப் குழு ஒன்றில் அவள் அனுப்பிய செய்தியை மற்ற மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

என்.பி.சி. மியாமி வெளியிட்ட அறிக்கையின்படி , "2026, ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக, வாட்ஸ்அப் குழு சாட் வழியாக, தனிநபர்களை கொல்லப்போவதாக அல்லது உடல்ரீதியாகத் துன்புறுத்துவதாக அவர் அச்சுறுத்தல் விடுத்தார்" என்று கைது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.