வார இறுதியில் ஹார்முஸ் நீரிணையில் கன்டெய்னர் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அது தீப்பிடித்து எரிந்ததோடு, அதில் இருந்த ஒரு பணியாளரும் காணாமல் போனார். இதனை தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது பல கட்டத் தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலடியாக, ஈரான் பஹ்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது. நீரிணையின் மறுபுறத்தில் உள்ள ஓமான் நாட்டை, கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதில் ஒத்துழைக்குமாறு தெஹ்ரான் வலியுறுத்தி வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த நீரிணையில், சுதந்திரமாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களை தாக்கும் ஈரானின் திறனை குறைப்பதே தங்களின் நோக்கம் என்று அமெரிக்க இராணுவம் கூறியது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மற்றும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஈரானில் நடந்த மூன்றாவது கட்ட தாக்குதல்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியானது.
இராணுவ இலக்கு:
ஈரானிய அரசு ஊடகங்கள் இந்த சமீபத்திய தாக்குதல்களை ஒப்புக்கொண்டன, ஆனால் நீரிணைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உயிரிழப்புகளோ அல்லது பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்தன. ஏதேனும் இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டனவா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
சில தாக்குதல்கள் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், துணை இராணுவப் புரட்சிக் காவலர் படகுகளையும் குறிவைத்ததாக ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். இராணுவ நடவடிக்கைகள் குறித்து பகிரங்கமாக விவாதிக்க அவருக்கு அதிகாரம் இல்லாததால், அந்த அதிகாரி பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசினார்.