அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருநாடுகளும் தாக்குதல்களில் ஈடுபட்டன.
தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரானின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியது. இதற்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் ஈரானுடன் அதிவேகமாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும், நம்முடன் துணை நிற்கும் மற்றவர்களுக்கும் மிகவும் சாதகமான ஒன்றாக அமையும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தான் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகவும், அதன்படி, லெபனானின் பெய்ரூட்டிற்கு எந்த படைகளும் செல்லாது என்றும் கூறினார்.
மேலும் அங்கு சென்றுகொண்டிருந்த படைகள் ஏற்கெனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன.
அதேபோல் உயர் மட்டப் பிரதிநிதிகள் மூலம் ஹிஸ்புல்லாவுடனும் தான் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டதாகவும், அதில் இஸ்ரேல் மீதும் அதன் வீரர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதேபோல, ஹிஸ்புல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த இஸ்ரேலும் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.