உலகம்

Iran War | ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போர் நிறுத்தம்! அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்

முகமது பின் சல்மானுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈடாக போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சாத்தியமான ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாக ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரான் அதிபர் போர் நிறுத்தத்தை விரும்புவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி "திறந்து, தடையின்றி, தெளிவாக" இருக்கும்போது மட்டுமே அது நிகழும். அதுவரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழிப்போம் அல்லது, அவர்கள் சொல்வது போல், கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம்!!!", என்று டிரம்ப் எழுதினார்.

இருப்பினும், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தக் கூற்றை "பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என்று குறிப்பிட்டார்.

புதன்கிழமை மாலை தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ள டிரம்ப், தெஹ்ரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டவுடன், இரண்டு முதல் மூன்று வாரங்களில் போரில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று போர் தொடங்கியதில் இருந்து, டிரம்ப் மாறிவரும் நோக்கங்களை முன்வைத்து வருகிறார். மேலும் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று மீண்டும் மீண்டும் கூறி வருவதோடு, மோதலை விரிவுபடுத்துவதாகவும் அச்சுறுத்தி வருகிறார். கூடுதலாக ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் தற்போது மத்திய கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.