உலகம்

அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!

வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்; தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வாஷிங்டனில் மூன்று நாட்களாக நடைபெற்ற அவசர வர்த்தகப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த கெடு முடிந்ததை அடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50% கூடுதல் வரியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை முறிவு:

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் மற்றும் கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் இடையே இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமெரிக்கா தரப்பில் எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல் மற்றும் மரம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க வரி விலக்குகளை அளிக்க முன்வந்தபோதிலும், கனடா புதிய நிபந்தனைகளை விதித்து ஏற்கனவே எட்டப்பட்ட புரிதல்களில் இருந்து பின்வாங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி நடவடிக்கை

அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, பேச்சுவார்த்தைக் குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், "அமெரிக்கா கடைசி நிமிடத்தில் முன்வைத்த புதிய நிபந்தனைகள் நியாயமற்றவை, பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் ஒரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குபவை" என்று சாடியுள்ளார்.

"டாலருக்கு டாலர்" சமமான பதிலடி வரி

கனடாவின் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்குச் சமமாக "டாலருக்கு டாலர்" பதிலடி வரிகள் விதிக்கப்படும் என்று மார்க் கார்னி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் உள்நாட்டு தொழில்துறையினருக்கு அடுத்த சில நாட்களில் புதிய நிதியுதவித் திட்டங்கள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் தாக்கம்

அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய 50% வரியானது, ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரையிலான பல கனடிய ஏற்றுமதிப் பொருட்களைப் பாதிக்கும். கடந்த ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே $880 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ள நிலையில், இந்த மோடல் இரு நாட்டுப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.