உலகம்

Iran War | அமெரிக்க செயல்பாடு ராணுவ நடவடிக்கையின் நீட்சிக்கு சமம் - ஈரான் அதிபர்

ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பதில் தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவது என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.

இதனிடையே பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஈரானில் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தனது நாட்டின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கையானது, அமெரிக்காவின் "ராணுவ நடவடிக்கைகளின் நீட்டிப்பு" என்பதற்கு சமம் என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் கூறினார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஈரானின் சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உலகம் கண்டிருக்கிறது. கடற்படை முற்றுகை என்ற போர்வையில் செய்யப்படுவது, தனது எதிர்ப்புக்கும் சுதந்திரத்திற்கும் விலை கொடுக்கும் ஒரு தேசத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் நீட்டிப்பாகும். இந்த அடக்குமுறை அணுகுமுறை தொடர்வது பொறுத்துக்கொள்ள முடியாதது," என்று குறிப்பிட்டுள்ளார்.