லண்டன்:
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரிகளான மெகுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பினர்.
இதில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிரவ் மோடி, லண்டன் ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.
அதில் இந்தியாவில் சிறையில் அடைத்தால் தான் சித்ரவதை செய்யப்படுவேன் என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், இந்தியச் சிறை அமைப்பு மோசமாக உள்ளது என்றும் நிரவ் மோடி வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு அசாதாரண சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.