கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பிலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு வரும் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
1967ஆம் ஆண்டு முதல் ஒபெக் உறுப்பினராக இருந்து வரும் சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு அதில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது.
நாட்டு நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக அமீரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதல் விவகாரத்தில் சவுதி அரேபியா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகள் சரியாகச் செயல்படவில்லை என்ற அதிருப்தி அமீரகத்திற்கு ஏற்கனவே இருந்து வருகிறது.
எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து விலையை உயர்த்துவது தொடர்பான ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள், அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக கருதப்படுகிறது
தற்போதைய போர்ச் சூழலில் தனது சொந்த எண்ணெய் வர்த்தகத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நிர்வகிக்க அமீரகம் விரும்புகிறது. எனவே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியா மற்றும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக, ஒபெக் அமைப்பில் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்தது.
அமீரகத்தின் விலகல் ஒபெக் அமைப்பிற்கும், அதற்குத் தலைமை தாங்கும் சவுதி அரேபியாவிற்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முன்னதாக 2019 இல் கத்தார் மற்றும் 2024 இல் அங்கோலா ஆகிய நாடுகளும் ஒபெக் அமைப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.