உலகம்

ரூ.5.8 லட்சத்திற்கு ஏலம் போன 2 வயது சிறுவனின் ஓவியம்

லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது. சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார்.

மாலை மலர்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமைகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுகிறார்கள். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது. சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அந்த சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.

தொடர்ந்து சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் உருவாக்கினார். அதில், சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்டார். அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.82 லட்சம்) விலை போய் உள்ளது.