அமெரிக்காவின் 165 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை தற்போதைய அதிபர் டிரம்ப் கொண்டுவந்துள்ளார்.
1861-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க டாலர் நோட்டுகளில் கருவூலச் செயலர் மற்றும் கருவூல அதிகாரி ஆகியோரின் கையெழுத்துகளே இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் இனிவரும் அமெரிக்க டாலர் நோட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.
கருவூல அதிகாரியின் கையெழுத்திற்குப் பதிலாக அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவுள்ளது.
கருவூலச் செயலர் ஸ்காட் பெசெண்ட் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோரின் கையெழுத்துகள் அடங்கிய முதல் 100 டாலர் நோட்டுகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் அச்சடிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மற்ற மதிப்பிலான நோட்டுகளும் வெளியிடப்படும்.
அமெரிக்க சட்டப்படி உயிருடன் இருக்கும் அதிபரின் உருவப்படத்தை கரன்சியில் அச்சிடத் தடை உள்ளது. ஆனால், இது வெறும் கையெழுத்து மட்டுமே என்பதால், இதற்கு அனுமதி உள்ளது.
அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து அந்நாட்டு கரன்சியில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையே ஈரான் போர் காரணமாக பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் அவதிப்படும்போது இத்தகைய அறிவிப்பு தேவையற்றது என ஜனநாயகக் கட்சியினர் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"விலை உயர்வுக்கு நாம் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதை இந்த கையெழுத்து மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்" என்று ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி சாண்டெல் பிரவுன் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.