ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "நெருங்கிவிட்டன" என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.
"அணு தூசியை எங்களிடம் திருப்பித் தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நாம் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார். அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா கூறும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் ஈரானும் "மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையில்" ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், தடையற்ற எண்ணெய் விநியோகம், திறந்த ஹார்முஸ் ஜலசந்தி ஆகியவை கிடைக்கும் என்றும், எல்லாம் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணி நேர நீண்ட அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவாலும் ஈரானாலும் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை. அணு எரிபொருளை செறிவூட்டும் தனது உரிமையை விட்டுக்கொடுக்க தெஹ்ரான் மறுத்துவிட்டதாக வாஷிங்டன் வலியுறுத்தியது.
அமெரிக்கா தனது முன்மொழிவில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு முடக்க பரிந்துரைத்துள்ளது, ஆனால் தெஹ்ரான் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே இதற்கு ஒப்புக்கொள்ள முடியும் என்று கூறியதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகியவற்றின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.