உலகம்

இயேசுவை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.. போப் லியோவை மிரட்டிய டிரம்ப்-க்கு ஈரான் அதிபர் கண்டனம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பதினான்காம் லியோவை அவமதித்த அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் அதிபர் மசூத் பெசெகியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

போப் பேச்சு

கடந்த வார இறுதியில் வாடிகனில் மக்களுக்கு உரை நிகழ்த்திய போப் லியோ, "போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும், நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம், வலிமையை வெளிக்காட்டியதுபோதும். போர்களும் போதும். உண்மையான வலிமை சேவை செய்வதே.

முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும். போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம்.

மேஜைகளில் அமர்ந்து ஆயுதம், மரணங்களுக்கு திட்டமிடாமல் பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள்" என்று கூறினார்.

டிரம்ப் விமர்சனம்

அவரின் இந்த கருத்தை விமர்சித்த டிரம்ப், தன்னை இயேசு கிருஸ்துவாக சித்தரித்து ஏஐ புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

மேலும், "எனக்கு போப் பதினைந்தாம் லியோவை பிடிக்கவே இல்லை. போப்பாண்டவர் ஒரு ஆன்மீகத் தலைவரைப் போலன்றி, ஒரு இடதுசாரி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை போப்பாண்டவர் மறைமுகமாக ஆதரிக்கிறார். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் அவர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், லியோ ஒருபோதும் போப்பாண்டவர் ஆகியிருக்க மாட்டார்.

அமெரிக்க அதிபரை எதிர்கொள்ள ஒரு அமெரிக்கரையே போப்பாண்டவர் ஆக்க வேண்டும் என்ற திருச்சபையின் தந்திரத்தால் தான் அவர் அந்தப் பதவிக்கு வந்தார்" என்று விமர்சித்தார்.

போப் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்த போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஈரான் அதிபர் கண்டனம்

இந்நிலையில் போப்பை விமர்சித்த டிரம்பை சாடி ஈரான் அதிபர் தனது சமூக வலைதள பதிவில், "மேன்மைமிகு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களே, மாபெரும் ஈரான் தேசத்தின் சார்பாக, தங்களின் மேன்மைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தின் இறைத்தூதரான இயேசுவை அவமதிப்பது எந்தவொரு சுதந்திரமான மனிதனுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் பிரகடனம் செய்கிறேன். அல்லாவின் பெயரால் உங்களுக்கு மகிமை உண்டாகட்டும்."என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட ஏஐ புகைப்படம் சர்ச்சையானதால் அந்த படத்தை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இருந்து டிரம்ப் நீக்கியுள்ளார்.