உலகம்

அதிபர் டிரம்பின் மகள் இவான்காவை கொல்ல சதித்திட்டம்.. பின்னணியில் ஈரான்?

ஈரானிய ராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இவான்காவைக் கொல்ல சபதம் செய்துள்ளார்.

2024 தேர்தல் பிரசாரம் தொடங்கி நேற்று வரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு கொலை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஒவ்வொன்றில் இருந்து நூலிழையில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பியுள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது இளைஞர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா போரிட்டு வரும் நிலையில் இந்த கொலை முயற்சிகளுக்கு பின்னால் ஈரானின் கை உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அதிபர் டிரம்ப் உடைய மகள் இவான்கா டிரம்பைப் படுகொலை செய்வதற்காக ஒரு பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய முகமது பக்கர் சாத் தாவூத் அல் சாதி என்ற நபர் இந்த சதித்திட்டத்தின் மூளையாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2020ல் ஈரானிய ராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இவான்காவைக் கொல்லப் போவதாக அவர் சபதம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவான்கா தனது கணவர் ஜாரெட் குஷ்னர் உடன் புளோரிடாவில் உள்ள தங்களின் 24 மில்லியன் டாலர் மதிப்புள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

முகமது பக்கர், இவான்காவின் இல்லத்தின் வரைபடத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, "உங்கள் அரண்மனைகளோ அல்லது உளவு அமைப்புகளோ உங்களைப் பாதுகாக்க முடியாது" என்று அண்மையில் கூறியிருந்தார்.

அவர் மே 15 அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.