உலகம்

காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!

இதன் தாக்கம் அண்டை நாடான அமெரிக்காவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோ, காட்டுத்தீ புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றுத் தர கண்காணிப்பு நிறுவனமான 'IQAir' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட பெரிய நகரங்களின் பட்டியலில் டொராண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி மற்றும் காங்கோ குடியரசின் கின்ஷாசா ஆகிய நகரங்களை விட இங்கு காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுத்தீயின் தீவிரம்:

கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. அங்கிருந்து வீசும் பலத்த காற்று மற்றும் அடர்ந்த புகை மூட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த டொராண்டோ நகரத்தையும் சூழ்ந்துள்ளது.

ஆரஞ்சு நிற வானம்:

புகை மூட்டம் காரணமாக டொராண்டோவின் வானம் ஒளிரும் ஆரஞ்சு மற்றும் மங்கிப்போன மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் நகரின் முக்கிய அடையாளமான 'சிஎன் டவர்' கூட தெளிவாகத் தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்துள்ளது.

கடும் வெப்ப அலை:

காற்று மாசுபாட்டுடன் இணைந்து டொராண்டோவில் கடும் வெப்ப அலையும் வீசி வருகிறது. நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 37.3 டிகிரி செல்சிஸ் ஆகப் பதிவாகியுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை:

சுற்றுச்சூழல் அமைப்பான 'என்விரான்மென்ட் கனடா' டொராண்டோவிற்கு மிக உயர்ந்த அபாய அளவைக் குறிக்கும் "10+" காற்றுத் தர குறியீட்டுடன் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவசியமாக வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சிகள் ரத்து:

காற்று மாசுபாடு காரணமாக நகரின் பல பொது நீச்சல் குளங்கள், கோடைகால முகாம்கள் மற்றும் புகழ்பெற்ற 'ஃபிஃபா உலகக்கோப்பை ரசிகர் திருவிழா' நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க நகரங்களுக்கும் பரவும் அச்சுறுத்தல்:

கனடாவின் இந்த அடர்ந்த புகை மூட்டம் எல்லையைக் கடந்து அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் மாசசூசெட்ஸ் போன்ற வடகிழக்கு மாகாணங்களையும் எட்டியுள்ளது.

நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடவிருக்கும் நிலையில், இந்த காற்று மாசுபாடு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.