டிக்டாக்  
உலகம்

விதிமுறை மீறல் வழக்கு: அமெரிக்காவுக்கு ரூ.4000 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்

குழந்தைகளின் தகவலை சட்டவிரோதமாக சேகரித்த குற்றச்சாட்டில் ரூ.4000 கோடி செலுத்த டிக்டாக் ஒப்புக்கொண்டது.

அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்து விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (byte dance) சுமார் 4,000 கோடி ரூபாய் (400 மில்லியன் டாலர்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

டிக்டாக் நிறுவனம்

அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்ததாகவும், 13 வயதுக்குட்பட்ட பயனர்களிடமிருந்து பெற்றோரின் ஒப்புதலை பெறுவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் 2024-ம் ஆண்டு டிக்டாக் மற்றும் பைட்டான்ஸ் மீது நீதித்துறை வழக்குத் தொடர்ந்திருந்தது.

13 வயதுக்குட்பட்ட பயனர்களுடைய கணக்குகள் என்பது நிறுவனத்திற்கு தெரிந்திருந்தும், குழந்தைகளின் கணக்குகளை நீக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைகளை டிக்டாக் மதிக்கத் தவறியதாகவும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க நீதித்துறை தனது புகாரைத் தாக்கல் செய்ததிலிருந்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமையாளர் அமைப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா விதித்த தடையை தவிர்ப்பதற்காக, ஆரக்கிள், சில்வர் லேக் மற்றும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டு நிறுவனமான எம்ஜிஎக்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய, பெரும்பான்மையாக அமெரிக்கர்களுக்கு சொந்தமான டிக்டாக் அமெரிக்க கூட்டு நிறுவனத்தை நிறுவ பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அமெரிக்க நீதிமன்றம்

டிக்டாக் அமெரிக்கக் கூட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பயனர்கள் தளத்தை அணுகுவதற்கு பயனர்கள் தங்கள் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

மேலும், தங்கள் வயதை தவறாகக் குறிப்பிடும் 13 வயதுக்குட்பட்ட பயனர்களைக் கண்டறிய டிக்டாக் வயது சரிபார்ப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது” என்று அது கூறியது.

இதையடுத்து குழந்தைகள் தனியுரிமைச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி அமெரிக்க நீதித்துறை தொடுத்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, டிக்டாக் மற்றும் அதன் சீனத் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், 400 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்த ஒப்புக்கொண்டது.

இந்தத் தீர்வு குழந்தைகள் இணைய தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் (கோப்பா) கீழ் பெறப்பட்ட மிகப்பெரிய மீட்புத் தொகைகளில் ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி டிக்டாக் உடனடியாக 300 மில்லியன் டாலரையும், அதன் முன்னோடியான மியூசிக்கலி சம்பந்தப்பட்ட முந்தைய ஒப்புதல் ஆணையை ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, மேலும் 100 மில்லியன் டாலரையும் செலுத்தும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்வு, அமெரிக்க குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும் என்று அமெரிக்காவின் துணை தலைமை வழக்கறிஞர் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் கூறினார்.

மேலும் அவர், “இணையத்தில் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒப்படைக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்வதே துறையின் முன்னுரிமையாகும்.

இந்தத் தீர்வு குடும்பங்கள் எதிர்பார்க்கும் மற்றும் தகுதியான பாதுகாப்புகளை வலுப்படுத்துவதோடு கணிசமான இழப்பீட்டையும் உறுதி செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோப்பா (COPPA) மற்றும் அதன் அமலாக்க விதிமுறைகளுக்கு இணங்குவது தொடர்பான வழக்குகளுக்கு இந்த தீர்வு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் நீடித்த வழக்கு நடவடிக்கைகளால் ஏற்படும் தாமதம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தவிர்க்கும் என்றும் நீதித்துறை கூறியுள்ளது.

2019இல் அபராதம் செலுத்திய மியூசிக்கலி

இந்தத் தீர்வு முன்னதாக மியூசிக்கலி (Musically) சம்பந்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) ஒப்புதல் ஆணை தொடர்பாகவும் அமைந்துள்ளது.

சிறு குழந்தைகள் இந்த செயலியைப் பயன்படுத்துவதை அந்த தளம் அறிந்திருந்தும், அவர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது என்று FTC குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து மியூசிக்கலி அந்த நேரத்தில் 5.7 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது.