டுவிட்டர் 
உலகம்

டுவிட்டர் நிறுவனம் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

மாலை மலர்

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் டுவிட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை டுவிட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது.

ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் டுவிட்டரின் முதன்மை வருவாய் அதிகரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் கோர்ட்டில் தெரிவித்தார்.

இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பு ரூ.1100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.

கமிஷனின் இந்த கோரிக்கையை கூட்டாட்சி கோர்ட்டு அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் ரூ.1100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.