உலகம்

ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டத்தில் பங்கேற்க தடை- தலிபான்கள் புது உத்தரவு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த 2 நாடுகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் அங்கு வசித்து வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

ஈரான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள் அந்நாட்டு பிரச்சினை. இதனால் ஆப்கானிஸ்தானியர் யாரும் இதில் பங்கேற்க கூடாது என்று தலிபான் துணை மந்திரி அப்துல் ரகுமான் ரசித் தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT