தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.