உலகம்

பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக்கொலை

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.

Suresh K Jangir

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.