டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின், ஏஐ துறையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இம்மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
“இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் வகித்து வரும் எனது பொறுப்பிலிருந்து நான் விலகவுள்ளேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் புதிய திட்டங்களில் தொடர்ந்து பணியாற்ற உள்ளேன்.
அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
முதன்முதலாக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் கீழ் பணியாற்றியதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவருடைய தலைமைத்துவம் இல்லையென்றால், செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் நாம் முன்னிலையில் இருந்திருக்க மாட்டோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் பணியாற்றிய சில திட்டங்களை குறிப்பிட்டுள்ள அவர், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் பதவியில் இருந்து விலகினாலும், வெள்ளை மாளிகைக்கு வெளியிலிருந்து தொடர்ந்து ஒரு ஆலோசகராக அரசுடன் இணைந்து செயல்படுவார் என்று வெள்ளை மாளிகை ஏஐ மற்றும் கிரிப்டோ பிரிவுத் தலைவர் டேவிட் சாக்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களாக டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் தேசிய ஏஐ கொள்கை மற்றும் 'அமெரிக்க ஏஐ செயல் திட்டம்' ஆகியவற்றை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
இதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.