அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு
காலக்கெடு நிர்ணயித்த போதிலும், தாக்குதலையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
ஈரானின் தெற்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் F-15E போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து 2 விமானிகள் கீழே குதித்து உயிர் தப்பினர்.
அவர்கள் இருவரும் ஈரானிடம் மாட்டிவிடக் கூடாது என அமெரிக்கா தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் ஒருவரை உடனடியாக கண்டுபிடித்து மீட்டது.
இந்நிலையில், மற்றொரு விமானியும் பத்திரமாக மீட்கப்பட்டார் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். விமானியை மீட்டெடுக்க எடுத்த முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவற்றின் விவரம்:
அமெரிக்க வரலாற்றிலேயே மிக துணிச்சலான தேடுதல், மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அந்த வீரமிக்க போர் விமானி ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். எதிரிப்படையினர் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க தலைமைத் தளபதி, போர்ச் செயலாளர், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் மற்றும் சக போர் வீரர்கள் என 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டோம். ஆயுத அமைப்பு அதிகாரியை கண்டுபிடித்து மீட்க ஒரு நாளுக்கும் மேலாக ஆனது.
இதற்காக எனது உத்தரவின் பேரில், அவரை மீட்க அமெரிக்க ராணுவம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட டஜன் கணக்கிலான விமானங்களை அனுப்பியது. அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன, ஆனால் அவர் நலமாகி விடுவார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.