SpainAmbassador
உலகம்

இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன.

நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகப் புகாரில் சிக்கிய இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதர் ஜுவான் அன்டோனியோவை மாற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கனடாவில் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை புதிய தூதராக நியமிக்க அந்நாடு முடிவு செய்து, இந்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளது.

ஊழல் புகாரில் விசாரணை:

இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதராக ஜுவான் அன்டோனியோ உள்ளார். இவர் கடந்த 2024-ம் செப்டம்பர் மாதம் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜுவான் அன்டோனியோ மீது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் தொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக ஸ்பெயினின் ஊழல் தடுப்பு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது.

நிதி முறைகேடு புகார்:

கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு, இந்தியாவில் செயல்படும் ஸ்பெயின் நிறுவனங்களையும் ராஜஸ்தான் அரசையும் ஜுவான் அன்டோனியோ அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெயினைச் சாராத கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன என்றும் இது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை.

தூதரகத்தால் அதிகாரப்பூர்வ நிதிப் பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்றும் புகார்கள் தெரி விக்கபட்டிருந்தது.

இந்திய தூதர் மாற்றம்:

இந்த நிலையில் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி அதிக செலவில் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்தியாவில் உள்ள தனது தூதர் ஜுவான் அன்டோனியோயை மாற்றும் செயல் முறையை ஸ்பெயின் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அவர் விரைவில் மாற்றப்பட்டு இந்தியாவுக்கான புதிய தூதர் நியமிக்கப்பட உள்ளார். தற்போது கனடாவில் தூதராகப் பணியாற்றும் ஆல்பிரடோ மார்டினெஸ் செரானோவை இந்தியாவின் புதிய தூதராக நியமிப்பதற்கான முறையான ஒப்புதலைப் இந்தியாவிடம் ஸ்பெயின் அரசாங்கம் கேட்டு உள்ளது.