தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொந்தபுரி மாகாணம் பாங் க்ருவாய் மாவட்டத்தில் டெப்சிரின் என்ற உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இன்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்குள் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பலர் பள்ளி அறைகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அங்கு பதுங்கினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவ-மாணவிகளை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்தத் துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பள்ளிக்குள் இருந்த ஒரு மாணவரே என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.