ஜார்ஜ் டவுன்:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.
கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தொடர்ந்து அங்குள்ள வகுப்பறைக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நடன பயிற்சியையும் பார்வையிட்டார்.
முன்னதாக, ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.