துப்பாக்கி சூடு நடந்த பகுதி 
உலகம்

கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- பலர் உயிரிழப்பு

சேக்ரமென்டோ நகரில் உள்ள எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.

மாலை மலர்

சேக்ரமென்டோ:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 50 ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரின் நிலை என்ன? என்ற தகவல் வெளியாகவில்லை. 

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. அதில், துப்பாக்கியால் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கிறது. பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தெருவில் சிதறி ஓடுகிறார்கள். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன.

துப்பாக்கிச் சூட்டிற்கான சூழ்நிலை மற்றும் நோக்கம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் இதுபற்றி அதிர்ச்சியுடன் கூறி உள்ளனர். எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறி உள்ளனர்.

சம்பவ இடத்தில் பதற்றம் நிலவுவதால், பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.