மாஸ்கோ:
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடியை பேட்டரி காரில் அமரவைத்து தனது மாளிகை வளாகத்தில் அதிபர் புதின் வலம் வந்தார். அப்போது குதிரை தொழுவத்தையும் பிரதமர் மோடிக்கு அவர் காண்பித்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது.