புக்கரெஸ்ட்:
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா திரும்பிய மாணவர்களிடம் ரஷிய அதிபர் புதினே நேரில் சென்று ஆறுதல் கூறியதாக இணையத்தில் வீடியோ ஒன்று உலவி வருகிறது.
அந்த வீடியோவில், “ரஷிய அதிபர் புதின் நேரடியாக விமானத்திற்கு சென்று இந்தியர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்தியாவுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை காணுங்கள். இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடி சிறந்தவர்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வீடியோவில் உள்ள தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருந்தவர் ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதரான ராகுல் ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஆவார். அவர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீட்கப்பட்ட மாணவர்களிடம் சென்று உரையாடுகிறார்.
வீடியோவில் அவரது முகம் தெரியாததால் அவரை புதின் என கூறி சிலர் தவறான போலி செய்தியை தற்போது பரப்பிவிட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.