ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் முழு அளவிலான போர் மூண்டுள்ளது.
இந்த சூழலில் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் அல் சுகைக் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது சவுதியில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பல்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை ரிட்டன் கடல்சார் வர்த்தக அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஹார்முஸ்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மண்டேப் ஜலசந்திக்கு அருகே இந்த தாக்குதல் நடந்துள்ளது
அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரசு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை முற்றுகையிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ஹவுதிகள், சவுதிக்கு சொந்தமான கப்பல்களுக்கு கடல்சார் தடையை விதிப்பதாக இரு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து கண்காணிப்பகமான Kpler வெளியிட்ட அறிக்கையின்படி,
பாதுகாப்பு சூழல் வேகமாகச் சீர்குலைந்து வருவதால், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாப் எல் மண்டேப் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய பாதைகள் வழியிலான கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
ஹவுதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏடன் வளைகுடா அருகே பயணித்துக் கொண்டிருந்த பல வணிகக் கப்பல்கள் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பியுள்ளன.
இந்த முக்கிய கடல்சார் பாதைகளில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களால், உலகளாவிய சரக்குக் கப்பல்களின் பாதைகள் மாற்றப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாகச் சரக்குக் கட்டணம் கடுமையாக உயர்ந்து, சர்வதேச எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களை தாகினால், ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணுக்கு கண் என்று தங்கள் கொள்கை மூலம் தாங்களும் பதிலடி தருவோம் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.