உக்ரைன் போர், முதலாம் உலகப் போரை விட நீண்ட காலம் நீடித்து, ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா தனது முழு அளவிலான தாக்குதலை தொடங்கியதால் ஆரம்பித்த இந்த மோதல், தற்போது 1,569 நாட்களாக தொடர்கிறது. இது 1914-1918 போரின் கால அளவை விட அதிகமாகும்.
கருத்துக் கணிப்புகளின்படி, உக்ரேனியர்களில் சுமார் பாதி பேர், போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் அடுத்த ஆண்டுக்கு முன்பு முடிவடையாது என்றும் நம்புவதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை ஒன்று தெரிவித்தது. இது, 6 வருட போருக்கு பிறகு முடிவடைந்த இரண்டாம் உலக போரின் கால அளவிற்கு, இந்த போரின் கால அளவை நெருக்கமாக கொண்டு செல்லும்.
இரு மோதல்களின் அளவும் உலகளாவிய தாக்கமும் வேறுபட்டிருந்தாலும், அவற்றுக்கிடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்களும் இராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக, சண்டையின் மெதுவான, நீடித்த தன்மை மற்றும் புதிய தொழில்நுட்பம் போர்க்களத்தை மாற்றிய விதம் ஆகியவை இதில் அடங்கும்.
2022-ல் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தபோது, மாஸ்கோ ஒரு விரைவான வெற்றியை எதிர்பார்த்தது. கீவ்வை நோக்கிய அந்த முன்னேற்றம், சில நாட்களுக்குள் தலைநகரை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் உக்ரைனிய எதிர்ப்பு ரஷ்யப் படைகளை பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தியது.
தொழில்நுட்பம் போர்முறையை மாற்றியமைப்பதால், டாங்கிகளுக்குப் பதிலாக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இரு போர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடு, நவீன போரை வடிவமைக்கும் தொழில்நுட்பம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தனது பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ரஷ்யாவின் எண்ணெய் வளங்கள் மீது உக்ரைன் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதல்கள், போரை தொடரும் மாஸ்கோவின் திறனை பலவீனப்படுத்தும் அதன் வியூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.