உலகம்

காலிஸ்தானை விமர்சித்த பஞ்சாபி பெண் YouTuber கனடாவில் கொலை

வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்சியை கத்தியால் குத்திக் கொன்றனர்.வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது

மாலை மலர்

பஞ்சாபை சேர்ந்த 45 வயதான நான்சி கிரேவால் கனடாவில் வசித்து வந்தார். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் பஞ்சாபிகள் மத்தியில் மிகவும் பிரபலமான யூடியூபர் ஆவார்.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இரவு சுமார் 9:30 மணியளவில் அண்டாரியோ மாகாணத்தில் உள்ள விண்ட்சர்-எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள லாசெல் நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்சியை கத்தியால் குத்திக் கொன்றனர்.

தகவல் அறிந்து வந்த அவசர சிகிச்சை பிரிவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இவர் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். குறிப்பாக, தடை செய்யப்பட்ட SFJ அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னூன் மற்றும் அவரது பிரிவினைவாத கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாகச் விமர்சித்து வந்தார்.

பிரச்சினைகள் இருந்தால் இந்தியாவிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து கொண்டு வெறுப்பைப் பரப்பக் கூடாது என்று பேசி வந்தார்.

அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.