உலகம்

போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல்- மன்னிப்பு கோரிய காவல்துறை

போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொழும்பு:

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் விரட்டினர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனவே தாக்குதலை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரிகளிடம் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்களும் சில மாணவர்களும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியது.

போலீசாரின் தாக்குதலுக்கு மாணவர் அமைப்பு மற்றும் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT